Friday, February 7, 2014

அந்தப்புரம்

சக்கரவர்த்தி முதல் குறுநில மன்னர்கள் வரை அந்தப்புரம் வைக்காத மன்னர்களே கிடையாது. இந்த வார்த்தையை உபயோகிக்காத எந்த வரலாற்று எழுத்தாளரும் இல்லை, அந்தப்புரம் எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி அறியும் ஆவலில் வாங்கியதே முகில்  எழுதிய "அகம் புறம் அந்தப்புரம்"  என்ற வரலாற்று நூல். ஆயிரம் பக்கங்களை தாண்டிய இந்த புத்தகத்தை தூக்குவதே பெரிய பயிற்சி தான்.  இணயத்தில் அந்தப்புரம் பற்றிய தேடலில் ஒன்னும் அகப்படவில்லை. ஆதலால் வரும் தலைமுறையினருக்கு அந்தப்புரத்தை பற்றிய அறிவை உண்டாக்கவே இந்தப் பதிவு:)
துருக்கி சுல்தான்களின் அந்தப்புரம்தான் உலகிலேயே மிகவும் பிரசித்தப் பெற்றதும், சரித்திர ஆசிரியர்களால் கொண்டாடப்படுவதும் ஆகும். இணைத்திருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் இருந்து எடுத்தது, ஒட்டாமன் மன்னர்களின் அந்தப்புரம் பற்றியது. 

சரி அந்தப்புரம் எப்படி இருக்கும் ??

நீண்ட திரைச் சீலைகள்... அலங்கரிக்கப்பட்ட மாடங்கள்..எங்கு நோக்கினும் அழகிகள்....சில மன்னர்கள் தங்கள் வருவாயில் அற்பது சதவீதம் அந்தப்புரத்திற்கு செலவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...    

அந்தப்புரத்தின் தலைவி பட்டத்து மகாராணிதான். அந்தப்புரத்து பெண்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.

1.  மகாராணி - மன்னர் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்கள்
2.  ராணி - திருமணம் செய்து மனைவி போல நடத்தப்படுபவர்
3. ஆசை நாயகிகள் - மன்னனோடு கலவி கொண்டவர்கள்
4. அழகிகள் - மன்னனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருப்பவர்கள்

சரி இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் எப்படி ?
குளிக்குமிடம் 
தங்குமறை
நடனம்

மகாராணிகள் அறைகள் மிகப் பெரியது. சேவகம் செய்யவே நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பர்கள்.  ராணிகள் அறைகள் ஓரளவுக்கு பெரிதாக இருக்கும். ஆசை நாயகிகளுக்கு ஒரே ஒரு அறைதான். மற்ற அழகிகள் பொது அறையில் தான் தங்க வேண்டும்.

உணவைப் பொருத்தவரையில் அரண்மனையில் ஒரு நாளைக்கு எழுபது பதார்த்தங்கள் சமைத்தார்கள் என்றால் மகாராணி எதுவேண்டுமென்றாலும் கேட்டு சாப்பிடலாம். தங்க தட்டில் பரிமாறப்படும். ராணிகளுக்கு முப்பது பதார்த்தங்கள் வரை வெள்ளித் தட்டில் வைத்து கொடுக்கப்படும். ஆசை நாயகிகளுக்கு அதிகப் பட்சம் பத்து பதார்த்தங்கள் பித்தளை தட்டில் வைத்து பரிமாறப்படும். 

சரி இவர்களது வேலை என்ன?


தங்கள் அழகுக்கு அழகு சேர்ப்பது...மன்னரை மகிழ்விப்பது. இசை, ஆடல், பாடல், கூடல் கலைகளைக் கற்றுக் கொடுக்க அதில் அனுபவமிக்க தனித்தனி ஆசிரியைகள் உண்டு. பட்டத்து மகாராணிக்குத்தான் கொஞ்சம் அதிகப்படியான வேலை. அந்தப்புரத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பது, சமையல்  துறை, மருத்துவ துறை, மன்னர் திருமணம் செய்த பெண்களையும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பற்றி கணக்கு  வைத்துக் கொள்வது .... ஒவ்வொன்றையும் கவனிக்க தனித்தனி செயலர்களை மகாராணி வைத்துக் கொள்ளலாம். 

காவல்??
அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு. காவலுக்கு பிறப்புறப்பு நீக்கப்பட்ட திருநங்கைகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். பல நேரங்களில் மன்னனின் நம்பிக்கைக்குரிய காவலர்கள் நியமிக்கப்படுவதும் உண்டு. அத்து மீறி நுழைபவர்களின் தலை அல்லது வேற உறுப்புகள் வெட்டப்படும். 

சரி அந்தப்புரத்திற்கு பெண்கள் எப்படி தருவிக்கப்படுகிரார்கள்?
பகை நாட்டிலிருந்து போரின் மூலம் பிடித்து வரப்படும் அழகான பெண்கள் அந்தப்புரத்தில் சேர்க்கப்படுவார்கள்(தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர் என அழைக்கப்படுவார்கள்). குறுநில மன்னர்களிடமிருந்து அன்பளிப்பாக வரும் அழகிகளும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள். மாற்றப்பட்டு மன்னர் நகருலா வரும்போது, வேட்டைக்குச் செல்லும்போது அகப்படும் அழகான பெண்களும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள்.

அந்தப்புர பெண்கள் பெரும்பாலும் அதை விட்டு வெளியே செல்லக் கூடாது. சென்றாலும் எதாவது விழாக்களுக்கோ, ஆறு குளங்களில் நீராடவோ, கோவிலுக்கோ மொத்தமாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஓரளவு வயதான பின்பு அந்தப் பெண்கள் அந்தப்புரத்திலிருந்து வெளியற்றப்படுவார்கள். அந்தப்புரத்திலிருந்து பெண்கள் வெளியேறினாலும், வேறு யாருடன் தொடர்பு வைத்திருந்தாலும் மரண தண்டன் நிச்சயம்.   

நோய் உள்ளவர்கள்(காய்ச்சல், சளி) , மாதவிடாய் கொண்டவர்கள் கூந்தலை அள்ளி முடியக் கூடாது. அதுதான் மன்னருக்கு கொடுக்கப்படும் சமிக்கை. அந்த சமிக்கையை உணர்ந்து மன்னர் கூந்தல் அள்ளி முடியாதவர்களை தொட மாட்டார்.  நீண்ட திரைக்கு பின்னால் அமர்ந்துதான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த ராணிக்கு எந்த வியாதி, என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் மருத்துவர் மூலம் தினமும் மன்னருக்கு தெரிவிக்கப்படும்.



Saturday, November 30, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 6

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…


காதல் தோய்ந்தொடும் இந்த வரிகளில் நானும் கரைந்தோடிக்கொண்டிருக்கிறேன்…

அரபு நட்டு பெண்கள் போல் இவள் அக்தரும் திரவியமும் அள்ளித்  தெளித்திருக்கவில்லை. மேலை நாட்டுப் பெண்கள் போல் இவள் இடை இறுக்கும் உடையும், உதட்டுச் சாயுமும் அணிந்திருக்கவில்லை. பழுப்பு நிற மேனியில் பரவியிருக்கும் மஞ்சளிலும் , சீயக்காய் தோய்ந்த கார் கூந்தலிலும், காதுமடல்களை தழுவி வழிந்தோடிய  வியர்வைத்துளிகள் படிந்த வாசத்திலும் மயங்கியிருந்த நாட்களை என்னவென்று சொல்வது!!??
தேகம் தழுவத் தேவையில்லை.. அவள் தாவணி நுணியில் பிரிந்தோடிய நூலின் உரசல் போதும்.. என் இரத்த நாளம் கொப்பளிக்க!!
பதிண்ம பருவத்தின் ஊக்கமோ அல்லது பருவ மங்கையின் தாக்கமோ தெரியவில்லை!!
ஆனாலும் அந்த நினைவுகள் என் இதயத்தின் உட்சுவர்களிலும், எலும்பு மஜ்ஜைகளிலும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் முல்லைச் சரங்களை முகர்ந்திருந்தாலும்… என்றோ அவள் கூந்தலிலிருந்து உதிர்ந்த ஒற்றை மல்லிகையின் வாசத்தை தேடி என் சுவாசம் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது.

kavithai.jpg
Image Source : vayalaan.blogspot.com



ஐந்தினை எழுபதில் நான் ரசித்த சில பாடல்கள்....

காமன் தேரில் காதலன் வருவான் கனிய கனியக் காதல் மொழி கதைக்கலாம் என்று காத்திருந்து காத்திருந்து காணமல் கண்ணீர் சொரியும் இந்தக் கன்னியின் கதையைக் கேளுங்கள்..

1.கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை
முல்லை தளவொடு போதவிழ - எல்லி
அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்
முலைவற்று விட்டன்று நீர்.


Tears-eyes-16143904-500-368.jpg

பாடலின் விளக்கம்:
இரவு முழுவதும் வானம் சிறிதும் நில்லாது மழை பொழிந்து மலைக்குன்றுகளில் உள்ள அழகிய முல்லைச் செடிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன.  இரவெல்லாம் என் மார்புக் குன்றுகளின் மேல் தொடர்ந்து கண்ணீர் மழை பொழிந்தும் என் நெஞ்சின் வெம்மையும் தணியவில்லை என வாழ்வும் மலரவில்லை எனத் துயரம் ததும்பக் கூறுகிறாள் இந்த முல்லை நிலத் தலைவி.


2. செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்
பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்
காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்
நீரோ(டு) அலமரும் கண்.


Stream+Reflection.jpg

பாடலின் விளக்கம்:
செம்மையாகிய கதிர்களையே கொண்ட கதிரவன் தனது சீற்றமாகிய வெப்பத்தை மறைத்துக் கொண்ட மாலைப் பொழுதிலே  பசுமையான கொடிகளையுடைய முல்லைச் செடிகள் பூத்து மணத்தை வீசுகின்றன. வண்டுகள் அந்தப் பூக்களை நாடிச் சென்று ரீங்காரமிடுகின்றன. இப்படி கார்கலத்துடன் சுழன்று தோன்றும் வானத்தைக் காண்கிறபோதேல்லாம் என் கண்களில் நீர் கோர்க்கிறது.

வேனிற்கால வெப்பம் தீர்ந்துபோய் கார்காலத்தில் நீர் தூவுகின்ற முகில்களைக் கண்டபோதும் என் காதல் வேட்கை தணிக்க  காதலன் அருகில் இல்லையே என் புலம்புகிறாள்.

3.இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்
குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்
வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை
அலையும் அலைபோயிற்(று) இன்று.


பாடலின் விளக்கம்:
(தண்+குளவி - குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள்; பொதும்பில் - சோலையில்;)
இலைகள் அடர்ந்த குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள் சோலைகள் எங்கும் படர்ந்துள்ளன. அந்தச் சோலையில் கொத்துக்களாகவுள்ள காந்தள் பூக்களிடம் ஆரவாரத்துடன் வண்டுகள் சென்ற தேனை நுகர்கின்ற நாட்டினை உடைய தலைமகன் நம் வீட்டிற்க்கு வந்தான். அவன் வரவினால் நம் அன்னையின் வருத்தமானது நீங்கியது.

பூக்களிலே மல்லிகையின் வாசம் இன்ப வேட்கையை கிளர்ந்தளச் செய்யும். அதனால் தான் "மல்லிகை என் மன்னன் விரும்பும் பொன்னான மலரல்லவோ " என்று பாடினார்களோ என்னவோ ?? இந்தப் பாடலில் "அன்னை அலையும் அலைபோயிற்று"  என்று கூறப்பட்ட வரிகளால் அன்றும் அன்னையர்கள் தன் மகளிரின் திருமணம் குறித்து கவலைகளிலே இருந்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

Tuesday, November 19, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 5

தூரக்கிழக்கு கரை ஓரந்தான்
தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ
!! எம்பாட்ட கூறதோ  !!   
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ !! 

ஏகாந்த அமைதியில் சுழலும் இன்னிசையும் என்னவளின் நினைவுகளும் இணைந்துவிட்ட ஒர் இனிய இரவில், கற்பனையெனும் காற்றுக் குதிரை ஏறி பால்ம வீதிகளில்  பாய்ந்தோடிக் கொண்டிருந்த கணத்தில் எழுந்த ஒரு சின்ன சிந்தையே இந்தப் பதிவின் மூலம்...

கற்பனை என்ற சொல்லுக்கும் சிந்தனை என்ற சொல்லுக்கும் அதிக வேறுபாடு கிடையாது என்றே நினைக்கிறேன். ஒழுங்குபடுத்தப் படாத எண்ண ஓட்டங்களை கற்பனை என்றும் சீர்படுத்தப்பட்ட எண்ண ஓட்டங்களை சிந்தனை எனலாம் என்று நினைக்கிறேன்.

நாளைய பற்றிய ஏக்கங்களும், எண்ணங்களும்தான் மனிதனை உயிர்ப்புடன்   வைத்திருக்கவும் புது புதிதாக  எதையாவது படைப்பதற்கும் உந்துதலாக இருக்கிறது. மனிதனின் இயக்கத்திற்கும், ஏற்றத்திருக்கும் இந்தக் கற்பனைதான் முதற் படிக்கல்.  நம்முடைய  களிப்பு, சலிப்பு, விழிப்பு எல்லாமே இந்தக் கற்பனையூடாகத்தான் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் படுகிறது . ஏன் இந்தப் பதிவை இடும்போது கூட நாளைக்கு யாரவது இதைப் படித்து மகிழக் கூடும் என்ற கற்பனையிலேயே எழுதுகிறேன்.

அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் இன்று எல்லாமே கூப்பிடு தூரம்தான். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருவரது தொடர்பு நிலை என்பது வெறும் கற்பனை தான். ஆதலால் தான் நெஞ்சுவிடு தூது, முகில்விடு தூது,  கிள்ளைவிடு தூது, விறலிவிடுதூது என எல்லாவற்றையும் தூதனுப்பி காத்திருப்பர்...

இவற்றிக்கு ஒப்பான சங்க இலக்கிய பதினெண் கீழ்க்கணக்கு நூலகளில் ஒன்றான ஐந்திணை எழுபதிலிருந்து சில கவிநயமிக்க பாடல்களை காணலாம்.

ஆலி விருப்புற் றகவிப் புறவெல்லாம்
பீலி பரப்பி மயிலாலச் - சூலி
விரிகுவது போலுமிக் காரதிர வாவி
யுருகுவது போலு மெனக்கு


(ஆலி - மழைத்துளி;பீலி - மயில் தோகை;சூலி - கருக்கொண்டு)



மயிலினங்கள் மழைத்துளிகளை காதலுடன் கூவியழைத்துக் கொண்டு முல்லை நிலமாகிய எல்லாப் பாகங்களிலும் தன தோகைகளை விரித்து ஆடுகிறது. நீர் சுமந்த கார் வானம் முகிலைக் கிழித்து மழையைப் பொழிய காத்திருக்கிறது. அதாவது மேகம் கருக்கொண்டு, தன் குழந்தையாகிய மழையைப் பிரசவிக்க இடி இடித்து முழங்குகிறது. இந்த ஓசை காதலனை விட்டு தனித்திருக்கும் என்னை உலையிலிட்டு உருக்குவது போல உயிரை வருத்துகிறது.


2. இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப விடிமயங்கி
யானு மவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும்.
 


அரிய கலைமான்களின் கூட்டம் மகிழ்ச்சி பொங்க காட்டிடத்தே சுற்றித் திரிகின்றன ! கொல்லைகளிலுள்ள கொடிகள் சுருண்டு கிடக்கும் முல்லையும் துளிர்க்க தொடங்கியிருக்கிறது. சிறு மாலையானது நானும் பிரிந்து போன என் காதலரும் வருந்துமாறு இடியும் முகிலும் இணைந்து வருகிறது. மாலையொன்று போதாதா என்னை வாட்ட ??!!   இடியும் முகிலும் இணைந்து வருவதேன் ?? என்னை முற்றிலும் ஒழித்து விடுவதற்கோ  என் தோழி !!

Friday, October 18, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 4

  
அதிகமாக ஊடல், கூடல் பற்றியே எழுதியாச்சு. இன்றைக்கு ஒரு மாறுதலாக வீரத்தை பற்றி எழுதலாம். 

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு இதை
உரக்கச் சொல்வோம் உலகுக்கு !!

இனம் ஒன்றாக
மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!

இரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றித் தாமரையை பறிப்போம் !!

இருவர் படத்தில் வரும் இந்தப் பாடல் வரிகள் நரம்புகளை முறுக்கேரச் செய்யும்.

பழங்காலப் போர்க்களங்களில் போர் தொடங்குவதற்கு முன் பறை, பம்பை, திட்டை, தடாரி, முழவு, முருடு, கரடிகை, திண்டி போன்ற கருவிகளை ஒன்று சேர்த்து இசைக்கச் செய்வர். இந்த இசையைக் கேட்டு வீரர்களின் நரம்பு முறுக்கேறி, போர் வெறி பிறக்குமாம். மனிதர்களுக்கே இப்படியெனில் யானைகளுக்கு கேட்கவா வேண்டும்

இந்த முத்தொள்ளயிரப் பாடலி கொஞ்சம் கவனியுங்கள். 

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால் - தேறாது
செங்கண் மாக்கோதை சினவெம் களியானை
திங்கள்மேல் நீட்டும் தன் கை

கொடிய போர்க்களம். வீரம் கொண்ட மன்னர்களின் விரிந்த வெண்தாமரை போன்ற வெண்கொற்றக் குடையை சேரனுடைய பட்டத்து யானை பிடுங்கி எறிந்து நொறுங்கச் செய்கிறது. சினம் சினம்!! பிடித்து எறிந்தும் அதன் கோபம் ஆறவில்லை. சினமிக்க அந்த யானை வானில் தெரியும் வெண் நிலவை பகை மன்னனின் வெண்கொற்றக் குடை   என்று எண்ணிக் கொண்டு அதையும் பிடுங்கி எறிய தன துதிக்கையை நீட்டுகிறதாம் !! என்ன கற்பனை !!



Monday, October 14, 2013

உணர்ச்சிப்போலி






கோபம்கொண்டு குமைந்தபோதும்
துரோகம்கண்டு துவண்டபோதும்

வறுமைகொண்டு வாடியபோதும்
வெறுமைகொண்டு ஓடியபோதும்

நறவுண்டு களித்தபோதும்
உறவுகண்டு புளித்தபோதும்

வாடைதழுவி உறைந்தபோதும்
பேடைதழுவி கறைந்தபோதும்

புலவிநீண்டு தீய்ந்தபோதும்
கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில்

இருப்பை உணர்த்திய நிழலே
மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !!

இரத்தம் கெட்டு சத்தம் கெட்டு
எயிறு கெட்டு வயிறு கெட்டு
வாசம் கெட்டு சுவாசம் கெட்டு
இதயம் கெட்டு இதழ் கெட்டு
ஊன் கெட்டு உறக்கம் கெட்டு
உருவம் கெட்டு பருவம் கெட்டு

அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த
உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?

Sunday, October 13, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 3


நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது  உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது

விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி,
இடை தழுவி
இமை மூடி
இதழ் ஒற்றி
இன்பம் துய்க்காமல்
இன்னும் ஏன் ஊடலோ?

மஞ்சத்தில் துஞ்ச ...
நெஞ்சம் கெஞ்சும் அஞ்சுகம் அவள் தஞ்சம்.
கோபம் விஞ்ச எஞ்சிய இரவும் நஞ்சே !!

அந்த முத்தொள்ளாயிரப்  பாடல் இதுதான்

யான் ஊடத் தான் உணர்ந்த யான் உணரா விட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் – தேனூறு
கொய் தான் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இராக் கழிந்த வாற



 விளக்கம்:

நான் பொய்க்கோபம் கொண்டு ஊடினால் அவன் என் பொய்க்கோபம் தீர்க்க தக்க சமாதனம் கூறி ஊடலைப் போக்க முன்வருவான். ஆனால் நான் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஊடலைத் தொடருவேன். இதனைக் கண்ட அவன் பிறகு என்னோடு ஊடல் கொள்ளுவான். நான் அவனைத் தேற்ற முற்படுவேன். ஆனால் அவன் அதற்க்குச் செவி சாய்க்க மாட்டான். இப்படியாக தேன் சிந்தும் வாச மலர்களை சூடிய எம் மன்னனின் சந்தனம் பூசிய மார்புகளில் தழுவி இன்பம் அடையாது வீணாக இந்த இரவுப் பொழுது கழிகிறதே !!

******************************************************************
 



வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

அருமையான இந்தப் பாடல் வரிகள் சொல்லும் செய்திகள் ஆயிரம்.. ..

வேரும் இல்லாமல் விதையும் இல்லாமல் விண் தூவுகின்ற மழையும் இல்லாமல் பூந்தோட்டம் பூக்குமா !!??
ஆம். காதல் என்ற பூந்தோட்டம் பூக்கும். அன்பு கொண்ட நெஞ்சில் எல்லாமே சாத்தியம்... மண்ணும் மாமலையும் விண்ணும் பொன்னும் பொருளும் எதுவுமே இவர்களுக்கு பொருட்டே இல்லை. ஈதல் இரத்தல் இந்த இரண்டிலும் இன்பம் இங்கு மட்டுமே.

அன்னையும் கோல்கொண்டு அழைக்கும் அயலாரும்
என்னையும் அழியும் சொல் சொல்லுவார் - உள்நிலையை
தெங்குஉண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண் தேர் வளவன் திறத்து

தாயாரும் என்னை தடி கொண்டு அடிக்கிறாள். ஊராரும்  என் உள்ளம் வருந்த பழி கூறுகிறார்கள். ஆனால் அவனை நான் பார்த்தது கூட இல்லை. எல்லாம் எதனால்?? அவன் பின்னே என் மனம் சென்றதனால் !!  தன நிலைமையை ஒரு அருமையான உவமையால் விளக்குகிறாள்.

தென்னை மரத்தில் தேங்காய் குரும்பையாக வளர்கின்ற போதே தேரை நோய் பற்றிக் கொள்ளும்.அதனால் தேங்காய் வளர்ச்சி குன்றும். இங்கு தேரை தேங்காயை உண்பதில்லை. ஆனால் உலகத்தார் தேரை உண்ட தேங்காய் என்று ஒதுக்கி தள்ளுவர். பாவம் தேரை தேங்காய் திண்ணாமலேயே தின்றதாக பழி ஏற்கிறது. என் நிலையும் அப்படித்தான் .

திரும்பவும் அந்தப்  பாடல் வரிகளை ஒரு முறை வாசியுங்கள் ..

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
                           இது என்ன இவள் தோட்டம் பூப்பூக்குதே...!!

Thursday, October 3, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம் - 2

வாடைக் காற்றே!! காதலர்களை வாட்டுவதல்தான் உனக்கு வாடை என்ற பெயரோ !!??

மாலை மயங்கி மன்மதன் தன் மலரம்புகளை எய்யும் வாடை வீசும் மார்கழி மாதம்.  பால்நிலவு தன் பட்டுப் பாதங்களை பூமியில் மெல்ல பரப்பும் காலம் காட்டில் வாழும் காடைகளும் தன் பேடைகளுடன் சுகித்திருக்க இவளோ தனிமையில் !! காதல் நினைவுகள் கனலாக கொதிக்க குளிர் வாடையும் கொடும் அனலைச்  சொரிகிறது!!

காதலன் தழுவிய எண்ணங்களை தழுவுவதால் அவள் காதல் வேட்கை கட்டுக்கடங்காமல் பெருகுகிறது. மோகம் என்னும் தாகம் பருகாமல் அடங்காது.. என்ன செய்வது?? கட்டுக் காவலும் அதிகம்...அதனால் வந்து விடாதே என்று காதலனை எச்சரிக்கிறாள்!!  

தமிழில் வேட்கை என்ற வரத்தை ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. ஒன்றின் மேல் கொண்ட ஆசை(காதல், விடுதலை...எதுவானாலும் சரி) அதை அடையும் வரை அதன் மேல் உள்ள விருப்பு குன்றிமணி அளவும் கூட குறையாமல் அதே வேகத்துடன் இருப்பது.

பாடல் இதுதான்

நாம நெடுவேல் நலங்கிள்ளி சேணாட்டுத்
தாமரையும் நீலமும் தைவந்து - யாமத்து
வண்டொன்று வந்தது வாரால் பனிவாடாய்
பண்டுஅன்று பட்டினம் காப்பு




குளிர்ந்த சோழ வளநாட்டில் உள்ள தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தழுவி வருடி மொய்த்து தேன் உண்ண வண்டு ஒன்று வந்தது.  வண்டு ஒன்று வந்ததே என்று வாடையே நீ இப்போது வந்து விடாதே !! அப்போது காவல் இல்லை இப்போது எங்கும் கட்டுக் காவல் என்று தலைவி கூறுகிறாள்.இதன் உள் அர்த்தம் என்னவெனில், கட்டுக் காவல் மிகுதியாகி விட்டது தலைவனே இப்போது வந்து விடாதே !!