Saturday, November 8, 2008

ஈழம் தமிழனின் பிறப்புரிமை

பல தமிழர்கள் இலங்கையை பற்றி தவறான புரிதலையே கொண்டுள்ளனர். இலங்கையின் பூர்வீக குடிகள் யார் ? தமிழ் ஈழ போராட்டத்தின் காரணம் என்ன ? இவற்றைப் பற்றி தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையின் பூர்வீக குடிகள்
இலங்கை தமிழர்கள் பொதுவாக இரண்டு பிரிவினராகக் கருதப்படுகிறார்கள். நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள், அப்பகுதிகளைத் பூர்வீகமாக கொண்டு வாழ்ந்து வருவதன் காரணமாக அவர்கள் இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழி தமிழர் எனப்படுவர். இன்னொரு பிரிவினர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட வேலையாட்களின் பரம்பரையினராவர். இவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இலங்கையின் வரலாற்று நூலாகக் கருத்தப்படும் சிங்களர்களால் எழுதப்பட்ட நூல் மகாவம்சம்.இந்நூலில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட சிங்கபாகு என்ற மன்னனின் மகனும் அந்நாட்டு இலவரசனனுமாகிய விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கி அரசு அமைத்து ஆண்டான் எனவும் அப்பொழுது இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியும் எழுதப்பட்டுள்ளது.இங்கு நாகர், இயக்கர் என்று குறிப்பிடப்பட்டது தமிழர்களைத்தான்.விஜயன் வந்தபொழுது இலங்கையை ஆண்ட அந்நாள் தமிழ் அரசி குவேனி என்பாள்.ஆக சிங்களர்களின் கூற்றுபடியே தமிழ்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள். சிங்களர்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு குடியேறியவர்கள் . (இலங்கை வம்சாவழி தமிழர்களும் இலங்கையின் பூர்வீக குடிகள் என்று இலங்கை அரசாங்கத்தாலும் இந்திய அரசாங்கத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.)

தமிழ் ஈழப் போராட்டம்
ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்களால் உரிமைகள் மறுக்கப்பட்டு, பாரம்பரிய மண் பறிக்கப்பட்டு, இனக்கலவரங்களில் உயிர், உடமை, கற்பு பறிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, பேச்சு, எழுத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ், இராணுவத்தின் அட்டூழியத்துக்கிடையில் வாழும் சிறுபான்மையினம்,சுதந்திரமாகப் பாதுகாப்புடன், நிம்மதியாக வாழ உந்தப்பட்டதன் விளைவு தான் தமிழீழப் போராட்டம். அமைதியை விரும்பிய, காந்தியத்தில் நம்பிக்கையுள்ள, சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றிய ஈழத்தமிழர்களை, ஆயுதமேந்திப் போராடுமளவுக்குத் தள்ளியவை இந்த அட்டூழியங்களே.

ஈழப் போராட்ட காரணங்கள் 1.தனிச் சிங்களச் சட்டம் 2.பெளத்தம் அரச சமயமாக்கப்படல் 3.இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 4.கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் 5.திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் 6.அரச பயங்கரவாதம் 7.யாழ் பொது நூலகம் எரிப்பு 8.சிங்களமயமாக்கம் 9.வேலைவாய்ப்பில் இனத்துவேசம் 10.சிங்களப் பேரினவாதம் 11.ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் 12.அரச சித்திரவதை 12.இலங்கைத் தமிழர் இனவழிப்பு

தனிச் சிங்களச் சட்டம்
1956 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே தனிச்சிங்கள சட்டம் ஆகும். இதன் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஒரு இனத்தின் இருப்புக்கு, உரிமைக்கு அடிப்படையாக அமைவது மொழி. ஒரு நாட்டில் தனது மொழி மூலம் ஒருவன் தனது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத் தொடர்புகளையும் ஆற்றும் உரிமை மறுக்கப்படும் போது அவனின் உரிமை பறிக்கப்பட்டதாகவும் நாட்டின் தேவையற்ற அந்நியனாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றான் என்பதே யதார்த்தமுமாகும்.சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டம்.

பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கை அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டதற்கு அமைய அனைத்த மக்களும் அவரவர் சமயத்தை பின்பற்ற உரிமை உண்டு, எனினும் இலங்கை அரசிற்கு பெளத்தம் முதன்மை பெறும் என்கிறது. நடைமுறையில் இது நிதி, ஆள், வளங்களை பெளத்த சமயத்துக்கு கூடிய அளவில் ஒதுக்குகிறது. மேலும், பெளத்த பாரம்பரித்தையை பேண கூடிய அக்கறை காட்டுகிறது. இது பிற சமயத்தவரை சம குடியாளர்களாக உணர சிரமப்படுத்துகிறது

இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த ஆறாவது மாதமே தமிழ்பேசும் மக்களை மேலும் சிறுபான்மையாக்கும் நோக்குடன் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லப்பட்ட மலையகத் தமிழரில் 10 லட்சம் பேரின் குடியுரிமை வாக்குரிமைகளைப் பறித்து, அவர்களை நாடற்றோராக்கினார்.
1827 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னர் பிரித்தானியர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்டு, இலங்கையின் பொருளாதரத்தை உயர்த்த அயராது வியர்வை சிந்தி உழைத்த 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களின்(இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குடியுரிமை மறுக்கப்பட்டு, அவர்களை ஆடு மாடுபோல், தாயிடமிருந்து மகனையும், மனைவியிடமிருந்து கணவனையும் பிரித்து இந்தியாவுக்கு நாடுகடத்தினார்கள் சிங்களவர்கள். அதன்மூலம் தமிழரின் நாடாளுமன்றப்பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்திண் முதுகெலும்பான மலையகத் தமிழர்களை 120 வருடங்களின் பின்னர் சிங்களவர்களால் நாடுகடத்தப்பட்டதற்க்குத் துணை போனவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் மேலும் விபரங்களுக்கு

திட்டமிட்ட தமிழினப் படுகொலை 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் என்ற பெயரால் ஜெயவர்த்தனா அரசாங்கமே திட்டமிட்டு தமிழினப் படுகொலையை நடத்தி, தமிழன் கறி இங்கே கிடைக்கும் என்று விளம்பரப் பலகை எழுதி வைத்து, தமிழர்களைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு சிங்கள இனவெறியர்கள் கடைபோட ஊக்குவித்ததையும் கண்டு பொறுக்க முடியாமலேயே அகிம்சை வழியை விட்டு, தமிழர்களை ஆயுதப் போராட்ட வழிக்குத் திருப்பியது. முதன்முதலாக ஈழத் தமிழர்களை உலகம் முழுவதிலும் அகதிகளாகப் புலம்பெயரச் செய்த கொடுமையும் அப்போதுதான் தொடங்கியது. இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறிக்கப்பட்ட போதுகூட பாராமுகமாக இருந்த இந்தியாவை இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி வைக்கும் அளவுக்குத் தூண்டியது. தமிழர்களின் பயங்கரவாதமா? இல்லை சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையே!

தமிழர்களின் வரலாறு

மேல உள்ள படத்தை பாருங்கள். இப்படித்தான் முந்தைய உலகம் இருந்தது.இதை மறுப்பதற்கு போதிய ஆதாரம் இல்லாததால் இதுதான் உண்மை என்று கொள்ள வேண்டும் . இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன குமரிக் கண்டத்தின் ஓர் எஞ்சிய பகுதி. இந்தக் குமரிக் கண்டம் தான் மூத்த குடியான ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக பூமி.குமரிக் கண்டம் கடற்கோளில் மூழ்கிப் போனதற்கு இலக்கியச் சான்றுகள் நமது தமிழ் இலக்கியத்தில் பல்வேறு இடத்தில் காணப்படுகின்றன.

"வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகம்"
- தொல்காப்பியம்

செந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே
- புறநூனூறு

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
- சிலப்பதிகாரம்

மேலும் இத்தீவில் உள்ள தாவர மற்றும் விலங்கினங்களை கொண்டு ஆராய்ச்சி செய்ததில் இலங்கை தீவானது தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத் தொடர்ச்சி என்று ஆராய்ச்சியாளார்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய
நாடுகளின் நிதி கொண்டு, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சி செய்ததில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக்கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

மேற்கூறிய சான்றுகளின்படி தற்போதைய இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியே என்பதும் அங்கு வசித்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதும் தெளிவாகக் புலப்படுகிறது.

தமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை ! 50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம்! சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள்.