Monday, June 21, 2010

சங்ககாலத்தில் மது(கள்)

கள் உண்ணும் வழக்கம் இன்று நேற்று வந்ததல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி எட்டாத காலத்திலே தொடங்கியிருக்க வேண்டும். என்று நெருப்பை பயண்படுத்த தொடங்கினானோ அன்றே கள் காய்ச்ச தொடங்கியிருக்க வேண்டும்.சங்க காலத்தில் அரசரும், மறவரும், புலவரும், கூத்தரும், பெண்டிரும், உழவரும் பான வகைகளில் கள்ளையே சிறந்த பானமாக உட்கொண்டனர். வெப்ப நாடாகிய தமிழகத்தில் காலை முதல் மாலை வரை உடல் வருந்தி உழைக்கும் உழவர்களுக்கு உடல் நோவை போக்கவும் நீர் வேட்கையை தணிக்கவும், குளிர்ச்சியுடையதாகவும் புளிப்பு சுவை உடையதாகவும் உள்ள கள் தயாரிக்கப்பட்டது.கள் என்பது அன்றைய வாழ்வியல் சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பானமாக இருந்தது. அரசர், சான்றோர்கள் மற்றும் உயர்குடிப் போர்வீரர்கள் குழுமியிருந்த அவையில்கூடக் கள் தடை செய்யப்படவில்லை. 



கள் ‍ என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌கள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது. 

மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.
கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன.

கூறு மிக்க அரிசி பனை மரத்தின் காய் இவற்றின் கூழ் 8 லிட்டர் ம‌ற்றும் 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் இவற்றின் கலவை மதுக்குழம்பு எனப்படும் (ஒரு தூணி உழுந்துக்கழுநீர், 1 கருடம் கூறு மிக்க அரிசி மற்றும் பெருங் குரும்பை)

ஒரு தூணி உழுந்துக்கழுநீர் - 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் 
பெருங் குரும்பை - பனை மரத்தில் காய்க்கும் பிஞ்சு காய் ‍நுங்குவின் முந்தைய நிலை 
1 கருடம் - 1 மரக்கால் -  8 படி - தோரயமாக 8 லிட்டர்

ஒர் ஆண்டு வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் தலையாயது என்றும், ஆறு மாதங்கள் வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் இடையாயது என்றும், ஒரு மாதம் ஊறல் வைக்கப்படும் மது வகைகள் கடையாயது என்றும் அழைக்கப்படும்.

தோப்பி 
ஒரு தூணி நீர்(21.5 லி) அரை மரக்கால்(4 ப‌டி) அரிசி மூன்று படி மதுக்குழம்பு இவற்றின் கலவை தோப்பி எனப்படும்.

தேறல் 
பன்னிரண்டு மரக்கால் மா ஐந்து படி மதுக்குழம்பு புத்திரகமரத்தின் பட்டை கனிகள் மணக்கூட்டு இவைகளின் கலவை தேறல் எனப்படும்.

பிழி 
ஒரு துலை விளம்பழம், ஐந்து துலை பாகு, ஒரு படி தேன் இவைகளுடைய கலவை பிழி எனப்படும். காற்கூறு மிக்கது தலையாயது. காற்கூறு குறைந்தது கடையாயது.

1 துலை - 1 துலாம் - 3.5 கி.கி.  
பாகு - செறிவாக் காய்ச்சிய சர்க்கரை

சாராயம் 
ஆடு திண்ணாப்பாளை திப்பிலி என்னும் இவற்றின் சாற்றைக் கொதிக்க வைத்து அதனோடு கருப்பஞ்சாறு வெல்லம் தேன்பாகு நாவற்பழச்சாறு பலாப்பழச்சாறு என்னும் இவற்றுள் ஒன்றைக் கலந்து ஒரு திங்கள் ஆறு திங்கள் அல்லது ஓர் யாண்டு வரை வைத்துப் பின் அதனோடு சிற்பிடம் வெள்ளரிப் பழம் கரும்பு மாம்பழம் நெல்லிக்கனி என்னுமிவற்றின் சாற்றிற் கலந்தேனும் கலவாமலேனும் அமைக்கப் படுவன சாராய வகைகளாம். 

நறும்பிழி
நெல்முளையைக் காயவைத்து  மாவாக்கி ,பிறகு அரிசியை கொதிக்க வைத்து அதனுடன் ஏற்கனவே அரைத்த மாவையும் கலந்து கூழாக்கி, அதை வாய் அகன்ற தாம்பளத்தில் இட்டு காய வைப்பார்கள். அதை குடத்தில் வைத்து இரு இரவும், இரு பகலும் தொடமல் வைக்க வேண்டும். இரு நாள் கழித்து எடுத்து உண்ணப்படும் கள்ளுக்கு நறும்பிழி எனப் பெயர். 

தேக்கள்
மூங்கில் அரிசியுடன் தேனைக் கலந்து கூழாக்கி, அந்த தெளிவை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்து சிறிது நாள் கழித்து எடுத்து பருக வேண்டும். இதற்கு தேக்கள் தேறல் எனப் பெயர்.

சங்க காலப் பெண்பாற் புலவர் ஒளவையாரும் தகடூர் அரசன் அதியமானும் சேர்ந்தே மது அருந்தியுள்ளனர் (புறநானூறு பா. 235). மன்னன் அதியமான் ஒளவையாரின் புலால் நாற்றம் அடிக்கின்ற கூந்தலை நரந்தம்புல்லின் மணம் வீசும் தன் கையால் தடவிக் கொடுப்பதாக ஒரு குறிப்புள்ளது. 

புணர்ச்சியின் போது நுகரப்படும் கள் காம பானம் எனப்பட்டது, போருக்குச் செல்லுமுன் மறவ்ர்கள் அருந்தும் கள் வீரபானம் எனப்பட்டது. பூக்கமழ் தேறல், மணங்கமழ் தேறல் என்று கூறப்படும் இருவகை மதுபானமும் காமபானமாக உட்கொள்ளப்பட்டதாக இலக்கியங்களில் காணப்ப‌டுகின்றன. பெண்கள் புணர்ச்சியினபோது கள் அருந்தியதாக பட்டிணப்பாலை பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.

"பட்டு நீக்கித்துகிலுடுத்தும் 
 மட்டு நீக்கி மதுமகிழ்ந்தும்” 

பெண்கள் புணர்ச்சி நேரத்தில் பட்டு ஆடகளை நீக்கி, நூலாடை அணிந்தும், மயக்கம் தராத கள்ளை உண்டு மகிழ்ந்தனர் எனப் பொருள். இங்கு "மட்டு" என்பது இனிய சுவை உடையது, மயக்கத்தை தராதது எனப் பொருள்படும்.

இதுகாரும்  கூறியவற்றை நோக்கின் நமது தமிழ் கலாச்சாரம் மது வகைகளுக்கு எதிரானதல்ல என்பதும், ஆரோக்கியமான மது வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது என்ப‌து நோக்க‌த‌க்க‌து.

Saturday, June 19, 2010

ஏகாந்த அமைதியை நோக்கி...

காற்றை கிழித்துச் செல்லும் கணையைப்போல்
நெஞ்சை துளைத்துச் சென்ற உன் விழிவீச்சில்
சத்தமில்லாமல் சாய்க்கப்பட்டது என் இதயம்..

கட்டுக்கடங்கா ஆசைகள் பல்கி பெருகி
பிரபஞ்ச வீதிகளில் இன்னிசையுடன் பயணமிட‌‌
இதுவரை உடல் உணர்ந்திடாத உணர்வுகள்
இன் அதிர்வுகளய்  உடலெங்கும் பரவி தழுவ‌
யாரையும் தீண்டாத தென்றல் ஒன்று எனைமட்டும்
தீண்டிவிட்டதான‌ இறுமாப்பில் கலித்து கூத்தாட ‍

சொல்லவெண்ணா சிந்தைகளின் செறிவால் எழும் இதயத்தின் இரைச்சல்
என்னுள்ளே ஒங்கி ஒலித்து அடங்கி ஒடுங்க‌
ஆசைக்கும் அறிவுக்குமான போரில் நான்
தாக்கப்பட்டு காயப்பட்டு  உடல் சிதைந்து உணர்விழந்து
ஏகாந்த அமைதியை நோக்கி என்னுயிர் எங்கோ பற‌க்க‌
முடிவில்லாமல் பயணிக்கிறேன்................

Monday, June 14, 2010

அசோகனை வென்ற இளஞ்சேட் சென்னி!!!

வட இந்திய அரசர்களில் மிக பெயர் பெற்றவரும் உலகெங்கும் புத்த மதத்தை பரப்பியவருமான அசோகர் மெளரிய வம்சத்தின் தோன்றலாகும். இவருடைய காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகும்.

இக்கால‌ கட்டத்தில் தமிழகம் தவிர தென்னிந்தியா முழுவதும் இவர் ஆட்சியின் கீழ் இருந்தது. இவ்வளவு வலிமை இருந்த போதும் ஏன் தமிழகம் இவன் குடையின் கீழ் வரவில்லை?  எந்த சக்தி இவனை தடுத்தது? தமிழக மன்னர்களுடன் போர் ஏதும் நடந்ததா? போரில் இவன் தோற்கடிக்கப்பட்டானா?அக்கால கட்டத்தில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தமிழ் அரசன் யார்? நீண்ட நாட்களாக‌ என்னை குடைந்து  கொண்டிருந்த கேள்வி?

ஆனால் சமீபத்தில் கா.அப்பாத்துரை அவர்களின் "தென்னாட்டு போர்க்களங்கள்" என்ற நூலை படிக்க நேர்ந்தது. அதில் கூறப்பட்டிருந்த செய்திகள் எனக்கு மிகப் புதிதாக‌ இருந்தது.  நாம் மௌரியர்களையும், குப்தர்களையும் தெரிந்திருந்த அளவு இளஞ்சேட்சென்னியையும், நெடுஞ்செழியனையும் தெரிந்திருக்கவில்லை அல்லது நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை.அதைப் பற்றி தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் நாம் இல்லை. அந்த அளவுக்கு ஆரியம் நம்மை சிதைத்திருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது வேதனைதான் விஞ்சுகிறது.

அந்நூலில் சோழ நாட்டின் எல்லையில் உள்ள செருப்பாழி என்ற இடத்தில் நடந்த போரில் அசோக படைகளை இளஞ்சேட்சென்னி தோற்கடித்தான் என்று கூறப்படுகிறது.

 புகார் என்ற காவிரி பூம்பட்டிணத்தை தலைநகராக கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும் பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன் உஜ்ஜயினியிலிருந்து முதலில் கலிங்கத்தை கைப்பற்றினான். கலிங்கத்தை வெற்றி பெற்றதும் கோசர்களை கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான். அந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனை கோசர்கள் காட்டிற்க்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான "பாழி"யை அரணாக்கி, வலிமைபடுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்க்கு கோட்டையாக்கி கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள்  திதியனையும் படிப்படியாக தாக்கினர்.

ஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன் அவர்களை முறியடித்து துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று பாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சம்யம் வரை மோரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில் ஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மோரியப் பேரரசைத் தட்டி எழுப்பின. அவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து தமிழகத்திற்க்கு வரும் பாதைகளை செப்பனிட்டனர்(இதைப்பற்றிய தகவல்கள் இலக்கியத்தில் காணக் கிடைக்கிண்றன).

மோரியப் படைகள் துளுவத்தில் தங்கி காட்டாறு போல் தமிழகத்தை வந்து தாக்கின. இனிமேலும் சிற்றரச‌ர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி இருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளை திரட்டினான். இப்போரில் மோரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன். மோரியர் மீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப் படைகளும் இப்போரில் ஈடுப்டுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும், சிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களை சிதறடித்தனர்.

அத்துடன் இளஞ்சேட்சென்னி நின்று விடவில்லை. துளுவ நாட்டிற்க்கு துரத்திச் சென்று பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு , அக்கோட்டையை தரைமட்டமாக்கும் வரை போரிட்டான்.  தமிழகத்தை போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் சமயப் போர்வையில் ஆட்சி புகழ் பரப்ப முனைந்தான் எனக் கருதலாம்.  

இளஞ்சேட்சென்னி மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்

"எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடி கடனாகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானை"


Sunday, June 13, 2010

ஆறலை கள்வர்கள்


குறுந்தொகையில் என்னை கவர்ந்த ஒரு வார்த்தை. சங்க இலக்கியத்தில் அதிகமாக கையாளப்படும் ஒரு சொல்லாடல்

ஆறு + அலை + கள்வர் - வழியில் மறித்துத் துன்புறுத்துகின்ற திருடர்


பாலை நிலமனிதர்களாகிய இவர்களுக்கென்று ஒரு நிலையான தொழில் கிடையாது . வறட்சி நிலமான பாலையில் விவசாயம் ஏதும் செய்ய இயலாத நிலையில் கொள்ளை அடிப்பதும் வழிப்பறி செய்வதும்தான் இவர்களது முக்கிய தொழிலாக இருந்தது. போர்க் காலங்களில் படை வீரர்களாக செயல்பட்டு, வெற்றி கிட்டினால் எதிரி நாட்டில் கொள்ளை அடிப்பதும் இவர்களது வேலை. இவர்களின் வழிபாட்டுத் தெய்வமாக “கொற்றவை” என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.

கொற்றவை என்பதற்கு ஆறலை கள்வர்களுக்குக் கொற்றம் தருபவள், வெற்றி தருபவள் எனபது பொருளாகும். போரின் போதும் வேட்டையின் போதும் வழி நடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கொற்றவை தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். ஆறலை கள்வர்கள் பசுக்களை  கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் அச்சம் தரத்தக்க இப் பெண் தெய்வத்தை வணங்கியே செல்வர். பிற்கால மன்னர்கள் போருக்கு போகும்போது கொற்றவையை வணங்குவதை வழ்க்கமாக கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட ஓராயிரம் காலம் கொற்றவையை மக்கள் வணங்கி வந்துள்ளனர். பின் எப்படி முருகன் அந்த இடத்திற்கு வந்தார் என்பது புதிராகவே உள்ளது. இதுவும் ஆரியர்களின் தாக்கமாக இருக்கலாம். ஆரியர்களால் தமிழர் இழந்தவைகளில் இதுவும் ஒன்று