Tuesday, September 17, 2013

களவு கொள்ளும் கவிக்கானகம்...

உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கை விரல் சேரத் துடிக்குது அன்பே அன்பே....

சமீபத்தல் நான் அதிக தடவை ரசித்த வரிகள் இது.. 

இசை காரணமோ? இயற்றமிழ் காரணமோ? தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை உட்கொள்ளும் தருணங்கள் உணர்ச்சி அரும்புகள் உடலெங்கும் அரும்பி பரவசம் பற்றி  எரிகிறது... எடையில்லாமல் எந்த தடையுமில்லாமல் பால்ம வீதிகளில் பறந்து திரிகிறேன். உழைப்புக்கும் ஓய்வுக்குமான இடைப்பட்ட கணங்களில் களித்தலுக்கு காலமேது என்ற கவலையைப் போக்கி உற்றுப் பார் உலகம் உன் காலடியில் என உணர்த்திய இந்த வரிகளை மெச்சுகிறேன். 

எங்கும் இன்ப மயம் !! எடுத்துக் கொள்வதும் விட்டுச் செல்வதும் உங்கள் வசம்.

சங்க இலக்கியத்தில் நான் ரசித்த அதனில் லயித்த சில கற்பனைகளை உங்களுடன் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம். பரவசத்தை பகிர்கிறேன்... தாகமுள்ளவர்கள் பருகலாம்.....

முதலில் புறத்திரட்டு நூல்களில் ஒன்றான முத்தொள்ளாயிரத்தில் இருந்து சில பாக்கள்.

1. அரக்காம்பல் வாய்அவிழ

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ
வெள்ளம் தீப்பட்டது எனவெரீப் - புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ! 



நீல வான் பரப்பில் நீந்திச் சென்ற இந்தப் நீர்ப் பறவைகளின் பரபரப்பிற்கு செவ்வாம்பல் மலர்கள் செய்த சதிதான் காரணமோ!! மென்மை உணர்த்தும் மலர்கள் வன்மையும் செய்யுமோ !!?? தனல் தணிக்கும் புனல் மீது அனலை அள்ளித் தெளித்தது யார் ?

கவிஞன் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவன் கவித்திறன் விஞ்சி நிற்கிறது..

பாடல் விளக்கம்:
சேறும் நீரும் நிறைந்த வயல்வெளிகளில் அரக்கு நிறத்து ஆம்பல் மலர்கள் மலர்ந்து பரந்திருக்கிறது. நீரின் மேல் மிதந்தது போல் நெருக்கமாக  காணப்படும்  இந்த ஆம்பல் மலர்கள் வயல்களில் நெருப்பு பற்றிக் கொண்டதுபோல் தோற்றமளிக்கிறது. இந்தக் காட்சிப் பிழையை உண்மையென நம்பிய வயலில் இருக்கும் நீர்ப் பறவைகள் தன கைகளாகிய சிறகுகளால் தம் குஞ்சுகளை தூக்கிக் கொண்டு பறக்கும். 


2. கடும்பனித் திங்கள்
 
கடும்பனித் திங்கள்தன் கை போர்வையாக
நெடுங்கடை நின்றது கொல்தோழி



மாலை முயக்கம் கொண்ட தலைவியின் தவிப்பை தோழி அறிவாளோ? அல்லது  துரும்பாகிப் போன கம்பிகளுக்குப் பின்னே உள்ளே தலைவியின் கண்ணீர் கதையை தலைவாசல் தான் அறியுமோ!!  

பாடல் விளக்கம்:
கடும் பனி பொழியும் மார்கழி மாதம், ஊனை உறுத்தும் குளிரை பொருட்படுத்தாது  இரு கைகளையும் போர்வை போத்திக் கொண்டதுபோல் மார்போடு அணைத்துக் கொண்டு, எனது மனது தலைவாசல் போய் நிற்கிறதே தோழி!! இதை என்னவென்று சொல்வேன்!