Wednesday, October 31, 2012

திரைப் பாடல்களில் சங்க இலக்கிய வரிகள் - 2


"என் சுவாசக் காற்றே" என்ற படத்தில் வரும் "தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்" என்ற பாடலின் முதலில் வரும் ஐந்து வரிகள் அப்படியே ஒரு குறுந்தொகை(௨௭) பாடல். இதை எழுதியது வெள்ளிவீதியார் என்னும் சங்கப் பெண் புலவர். இதைவிட காமத்தை வெளிப்படுத்த வேறு வரிகள் கிடையாது என்றே நினைக்கிறேன்.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது 
நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு 
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதாவது 
பசலை உணி இயற் வேண்டும் 
திதலை அல்குல் என் மாமைக் கவினே 

விளக்கம்: நல்ல பசுவின் இனிய பாலானது,  அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல்  தரையில் சிந்தி வீணானது போல, தேமல் படர்ந்த என் பெண்குறியும் மாந்தளிர் நிற அழகும் எனக்கும் பயன்படவில்லை, என்னுடைய காதலனுக்கும் இன்பம் தரவில்லை. பசலை படர்ந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.  

மாமைக் கவினே - மாந்தளிர் நிற அழகே.  என்ன வரிகள்  !!

அடுத்து காதலன் படத்தில் வரும் "இந்திரையோ இவள் சுந்தரியோ" எனத் தொடங்கும் ஒரு சின்னப் பாடல். இந்தப் பாடல்  திரிகூடராசப்பக் கவிராயரால் திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது. இது மிகச் சிறந்த சிற்றிலக்கிய காவியம் என்று சிலாகிப்பவர்களும் உண்டு . இந்தப் பாடல் வசந்தவல்லி என்பவள் தெருவில் பந்தாடிக் கொண்டிருப்பதை வருணித்து எழுதியது.  பாடல் இதோ  

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
     ரம்பையோ மோகினியோ - மன
முந்தியதோ விழி முந்தியதோ கர
     முந்தியதோ வெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
     சங்கணி வீதியிலே - மணிய
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
    பொற்பந்து கொண்டாடினாளே!

விளக்கம்: திருமகளோ! இரதியோ! அரம்பையோ! மோகினியோ! என்று, கண்டவர்கள் ஐய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்! இவள் பந்தாடும்போது, பந்து அடிக்க இவளின் மனம் முன் செல்கிறதா? இவள் கண்கள் தாம் முந்திச் செல்கின்றனவா? இவள் கைகள் முந்துகின்றனவா? எது முதலில் முன் செல்கிறது? என்று, வியக்குமளவுக்கு மூன்றாம் பிறையை அணிந்து தில்லையில் கூத்தாடியவர் வீற்றிருக்கும் குற்றால மாநகர் வீதியில் ஒய்யாரி வசந்த வல்லி பந்தாடினாள்.

இது எல்லாம் ஒரு சின்ன எடுத்துக் காட்டுதான். அதே நூலில் வரும் ஒரு சின்னப் பாடல் உங்கள் பார்வைக்காக  

கல்லுப் பதித்த தங்கச் செல்லக் கடகமிட்ட செங்கையாள்-எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக் கிடக்குமிரு கொங்கையாள்
ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் சுழிக்குமெழில் உந்தியாள்-மீதில்
ஒழுங்கு கொண்டுள்ளத்தை விழுங்கு சிறியரோம பந்தியாள்

துடிக்கு ளடங்கியொரு பிடிக்கு ளடங்குஞ்சின்ன இடையினாள்-காமத்
துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத் தொடையினாள்
அடுக்கு வன்னச்சேலை எடுத்து நெறிபிடித்த உடையினாள்-மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும் நடையினாள்.

 வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த மேனியாள் - ஒரு
வீமப் பாகம் பெற்ற காமப் பாலுக்கொத்த சீனியாள்

விளக்கம்: மணிகள் பதித்த தங்கத்தால் செய்த அழகிய வளையல்கள் அணிந்த சிவந்த கைகளை உடையவள். அடுத்த வரிகளை இரண்டு விதமாக கொள்ளலாம். கொங்கைகள் இரண்டுமே கச்சுக்குள் அடங்கி கிடந்தாலும்  காண காண தித்திக்கும் (அல்லது) எவ்விடத்திலும் உப்பு கரித்தாலும் அவ்விடத்து மட்டும் தித்தித்து கிடக்கும் எனவும் உரைக்கலாம்.முனிவர்களின் மனமும் சுழலும்படியான அழகிய தொப்புள் சுழியினை உடையவள். அந்த உந்தி சுழிக்கும் மேலாகா ஆடவரின் உள்ளத்தை விழுங்கும் சிறிய ரோமப் பந்தியினை உடையவள். இதுக்கு மேல விளக்கம் சொன்ன வேற மாதிரி இருக்கும் அதனால  இதோடு முடிச்சுக்குவோம் 


Tuesday, October 30, 2012

திரைப் பாடல்களில் சங்க இலக்கிய வரிகள் - 1

சங்க இலக்கியம் என்பது கற்பனையின் ஊற்றுக்கண் . கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அதை தொட்டுச் செல்லாமல் இருக்க முடிந்ததில்லை. சங்க இலக்கிய வரிகள் என்னென்ன திரைப்பட பாடல்களில் வந்துள்ளது என்பதை பற்றி ஒரு சிறிய அலசல்.

சங்க இலக்கியம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இருவர் படத்தில் வரும் "நறுமுகையே நறுமுகையே" பாடல் தான். அதில் வரும்  

"அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா"
 - அன்றொரு நாள் வெண்ணிலவின் ஒளியில் நெற்றியில் நீர்த் திவலைகள் முத்துப் போல் உருள கொற்றவனுக்கு உரித்தான சுனையில் நீரடியவள் நீயா?. (பொய்கை என்றால் இயற்கை நீர் நிலை : சுனை. குளமன்று) 

இந்த வரிகளை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு சில்லிடும் உணர்வு. இந்தப் பாடலில் வரும் மிகப் பிரசித்தி பெற்ற வரிகள்  "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்" புறநானூற்றில் நூற்றுப் பன்னிரண்டாம் பட்டிலிருந்து எடுத்தாண்ட வரிகள். கடையேழு வள்ளல்களில் ஒருவரான் பாரியின் மகள் பாடியதாக வரும். புறநானூற்றில் சோகத்தை சொன்ன அதே வரிகள் ..இருவர் படத்தில் காதலை சொல்லும்... அதே பாடலில் "யாயும் ஞாயும்  யார் ஆகியரோ" எனத் தொடங்கும் வரிகள் ஒரு அருமையான குறுந்தொகைப் பாடல் 

"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே" என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.

யாயும் ஞாயும்  யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன? 
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமா ? என கவலை கொண்ட காதலியை தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இது தான். உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தை பெற்று பிரிக்க முடியாதது போல  போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன.

அடுத்த முறை வேறு ஒரு பாடலை காணலாம்...






Monday, October 29, 2012

கனாக்களோடும் வினாக்களோடும்

மண்ணைத் துறந்து 
மனையை விடுத்து
மனையாளைப் பிரிந்து 
மழலைகளின் மொழிமறந்து
எல்லையற்ற ஆசைகளை சுமந்து
எண்ணற்ற கனாக்களில் கரைந்து  
எதிர்கால வண்ணங்களில் நனைந்து    
பெண்மகவு இரண்டு கொண்டதால்
பின்னாளில் பொருட்ச்செலவு  மிகுமென  
போருள்தேடச் செல்கிறேன் தொலைதூரம் -அங்கு 
துணையின்றி தூக்கம் தழுவுமோ
குழந்தைகாணா   கண்கள்தாம் அயறுமோ 
சுகதுக்கங்கள் பகிர சுற்றம் கிட்டுமோ 
நட்பு பாராட்ட நண்பன்  கிடைப்பானோ 
தனிமை எனை திண்ணுமோ        
வெறுமை எனை துறத்துமோ  
அலுவல்சுமை  எனை அமிழ்த்துமோ     
கனாக்களோடும்  வினாக்களோடும்  வானவீதியில் நான் .