Saturday, February 8, 2014

களவு கொள்ளும் கவிக்கானகம் - 7

விழிபட்ட இடம் இன்று
      உளிபட்ட சிலையாக
இது தானோ காதல் என்றறிந்தேனடி

புது பார்வை நீ பார்த்து
புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி!!

மெல்லிடை கொண்டு
 நடைகள் போடும் அழகான பெண்ணே
முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி!!
     
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்...


இசையோடு சேர்ந்த இந்தப் பாடல் வரிகள் என் இதய வார்ப்புகளை எப்பொழுதும் கீறிச் செல்லும்.


காதலிப்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோம் என்பதை உணரும் தருணம் இருக்கிறதே.....!! உணர்வற்ற உடலாய் உயிரற்ற சடமாய் ஏகாந்த வெளிகளில் சஞ்சரிக்கும் அந்த போதையை என்னவென்று சொல்வது !! எழுத்துக்களில் அடக்க முடியாத உயிரை அறுக்கும் உணர்வுகளின் தொகுப்பு அது..

ஐந்திணை எழுபதில் வரும் ஒரு பாடலைக் காணலாம்.....

K-and-Balarama-and-cowherd-boys-start-ou

ஓர் கார்கால மாலைப்பொழுதில் தோழியும் தலைவியும் பேசிக்கொண்டிருக்கும்போது ஆயன் ஒருவன் ஆநிரைகளை தெருவோரம் ஒட்டிக்கொண்டு வருகிறான். மாலை வேளையில் மகிழ்வோடு அவன் உள்ளம் துள்ள வந்து கொண்டிருக்கும் காட்சியை இருவரும் காண்கின்றனர். அதைக் கண்ட தலைவி கூறுவதைக் கேளுங்கள்.

மிகச் சிறந்த மலர்களினால் தொகுக்கப்பட்ட மாலையினை அணிந்து அவன் நடந்து வர அவனோடு சேர்ந்து அந்த மாலையும் அசைந்தாடி வருகிறது. அந்தப் புது மலர்களிலே உள்ள தேனை உண்ணும் விருப்போடு வண்டினங்கள் அவனைச் சூழ்ந்து ஆரவாரித்துக் கொண்டு வருகின்றன. தன் பின்னால் ஆநிரைகள் வீடுகளை நோக்கி மகிழ்வுடன் வந்து கொண்டிருக்க, அவன் நிமிர்ந்த நடையோடு புல்லாங்குழல் இசைத்து இன்னிசை எழுப்பிக் கொண்டு வருகிறான் . இவனைக் காண்பது கார்காலத்தில் நான் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவனை ஞாபகப்படுத்துகிறது. இந்த நேரத்திலே அவன் பின்னோடு வரும் பெரும் மழையானது மேலும் என் வேதனையை அதிகப்படுத்துகிறது தோழி !!

குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப
வாயன் புகுதரும் போழ்தினானாயிழாய் !
பின்னொடு நின்று பெயரும் படுமழைகொ
லென்னொடு பட்ட வகை.


No comments: