Monday, February 24, 2014

களவு கொள்ளும் கவிக்கானகம் - 8

காற்றுக்கு எல்லையுண்டு, கண் காணும் காட்சிக்கு எல்லையுண்டு, கலவிக்கும் புலவிக்கும் எல்லையுண்டு. ஆனால் கனவில் நாம் காணும் காட்சிக்கும் கற்பனைக்கும் எல்லைகள் உண்டோ !!?? செவ்வரி விழிகள் செய்கை மறந்து செயலிழக்கலாம். தேனூறும் இதழ்கள் கசந்து போகலாம். தயங்கி புறத்தூண்டலில் மயங்கி பின் முயங்கும் காலம் அழிந்து போகலாம். ஆனால் வாசிக்கும் எழுத்துக்களால் வழிந்தோடும் கற்பனைகள் வருடிவிடும் காதல் நினைவுகள் ஊன் ஒடுங்கினும் ஓயாது. என்னை இந்த கற்பனை பிரபஞ்சத்தில் படர வைத்த  இலக்கிய வரிகள் உங்கள் வாசிப்புக்கு...


nn1.jpg
(Image courtesy: solvanam.com)

ஓராயிரம் யானை கொன்றால் பரணி ..போர்ப் பொறி பறக்கும் பரணியில் காதற் பொறியும் பறக்கிறது.பரணி பாட சென்ற கணவன்மார்கள் வெற்றி கண்டு உடனே ஊர் திரும்பாததால் ஊடல் கொண்ட மனைவிகளை கதவை திறக்க சொல்லிப் பாடும் பாடல்கள் கொண்ட தொகுப்பு கடை திறப்பு...

வாச மாமலர்கள் மார்புதோய, மது
   மாலை தாழ்குழலில் வண்டுஎழுந்து
ஊசல் ஆட, விழி பூசல் ஆட உற
   வாடும் மாதர்! கடை திறமினோ!   


மனம் பரப்பும் மலர்களை தொடுத்து சூடிய பூமாலையானது அவளது மார்புகளில் தோய்ந்து ஆடிக் கொண்டிருக்கும்.  அவளது தாழ்கூந்தலில் (நீளமான கூந்தல்) அணிந்துள்ள மலர்களில் உள்ள மதுவை உண்ண வண்டுகள் வருவதும் போவதுமாக ஊசல் ஆடிக் கொண்டிருக்கும். தன்னை காண்போர் விழிகளில் ஒருவித கலக்கத்தை காம மயக்கத்தை உண்டாகக்கூடிய அளவுக்கு கண்களாலே காதல் மொழிகளில் உறவாடக்கூடிய பெண்களே உங்களது கதவுகளை திறவீர்!!

1798372_735505766473998_796887440_n.jpg
(Image courtesy: tamilartz.com)

பானல் அம் கண்கள் ஆட
      பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட
      பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட
      திரு மணிக் குழைகள் ஆட
வானவர் மகளிர் ஆடும்
     வாசம் நாறு ஊசல் கண்டார்.


கருங்குவளை போன்ற கண்கள் ஆட,
பவளம்  போன்ற வாயிலே புன் சிரிப்பு ஆட
விரும்பத்தக்க பெரிய மார்புகளிலே இட்ட  விலை மதிப்புமிக்க மாலைகள் ஆட
தேன்  வண்டுகள் கூந்தலிலே ஒலித்துக் கொண்டு ஆட
செவிகளில் பதிந்த அழகிய மணிகள் அணிந்த குழைகள்  ஆட
தேவ மாதர்கள் ஏறி  ஆடுகின்ற  மணம் கமழும் ஊஞ்சல்களைப் பாருங்கள்.

விலையி லாதவடம் முலையி லாட
    விழி குழையி லாட
விழை கணவர்தோள் மலையி லாடி
    வரு மயில்கள் போலவரு
மடந லீர்கடைகள் திறமினோ.


விலை மதிப்பற்ற மாலை மார்பில் ஆட, காதுவரை படர்ந்த விழிகள் காதுக் குழையில் ஆட,மலையில் ஆடும் மயில் போன்று மலை போன்று கணவர் தோளில் ஆடும் பெண்களே கதவை திறவீர்


வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட
     வளர்முலை தானு மாட வளையாட
மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட
     மதுரமு தூறி வீழ ...... அநுராகம்
இருவரு மேக போக மொருவர்த மாக மாக
     இதமொடு கூடி ......


செவ்வரி விழிகளை கொண்ட கண்கள் காமப் போரை விளைவிக்க,
    காதில் அணிந்த இரண்டு குண்டலங்களும் ஊஞ்சல் ஆடுவது போல் ஆட,
எழுந்தோங்கு மார்பகங்களும் ஆட, வளையல்கள் ஆட,
    ரத்தின சரங்களாகிய மாலைகள் ஆட, நறுமணம் வீசிக் கமழும் கூந்தல் ஆடி அலைய,
இனிமையான அமுதம் ஊறுகின்ற மொழிகள் சிதறி வெளிவர,
    காமப் பற்றுடன் ஆணும் பெண்ணுமாகிய இருவரும் ஒன்றாய்க் கலத்தலில் இருவர் உடல்களும் ஆட

No comments: