Monday, October 14, 2013

உணர்ச்சிப்போலி






கோபம்கொண்டு குமைந்தபோதும்
துரோகம்கண்டு துவண்டபோதும்

வறுமைகொண்டு வாடியபோதும்
வெறுமைகொண்டு ஓடியபோதும்

நறவுண்டு களித்தபோதும்
உறவுகண்டு புளித்தபோதும்

வாடைதழுவி உறைந்தபோதும்
பேடைதழுவி கறைந்தபோதும்

புலவிநீண்டு தீய்ந்தபோதும்
கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில்

இருப்பை உணர்த்திய நிழலே
மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !!

இரத்தம் கெட்டு சத்தம் கெட்டு
எயிறு கெட்டு வயிறு கெட்டு
வாசம் கெட்டு சுவாசம் கெட்டு
இதயம் கெட்டு இதழ் கெட்டு
ஊன் கெட்டு உறக்கம் கெட்டு
உருவம் கெட்டு பருவம் கெட்டு

அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த
உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?

No comments: